'கட்டிங்'கை விடுங்க.. 'கராத்தே' கத்துக்கங்க.. தொண்டர்களுக்கு சிபிஎம் அட்வைஸ்!!
பாலக்காடு: கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் மது பழக்கத்தைக் கைவிட வேண்டும், மத ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்பதுடன் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் கட்சி கொள்கைக்கு ஏற்ப தொண்டர்கள் எப்படி தங்களது வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான 62 பக்க அறிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் மீது நேற்று முதல் விவாதம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக கட்சி தொண்டர்கள் மது பழக்கத்தைக் கைவிட வேண்டும், மத ரீதியான நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மத அடிப்படைவாத சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தற்காப்பு கலைகளையும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத், தொழிலாளர் வர்க்கத்துடன் கட்சித் தொண்டர்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல் கட்சியில் இருக்கும் கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications