"எனக்கு டிசிப்பிளின்தான் முக்கியம்"- அமைச்சர்கள், அதிகாரிகளை வறுத்தெடுக்கும் நரேந்திரமோடி
டெல்லி: வழவழ என பேசக்கூடாது, முழுமையாக தயாராகிக்கொண்டு ஆலோசனை கூட்டங்களுக்கு வர வேண்டும், சொல்ல வந்ததை சுருங்கச் சொல்ல வேண்டும், அலுவலகம் சுத்தமாக இருக்க வேண்டும் இவைதான் மோடியிடம் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கற்றுக்கொண்ட பாடம்.
நரேந்திரமோடி பிரதமரானது முதல் அமைச்சர்களும், அதிகாரிகளும், கைநிறைய வேலைகளோடு சுற்றி வருகிறார்கள். அந்த அளவுக்கு, மோடி அவர்களுக்கு வேலை கொடுத்து வைத்துள்ளார். மோடியின் பணி ஸ்டைல் குறித்து அமைச்சர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன. இதோ அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள்:

சரியா சொல்லுங்க பாஸ்
பொதுப்படையான ஐடியாக்களை கொடுப்பதை தவிர்த்துவிட்டு குறிப்பிட்டு துல்லியமாக சொல்ல வந்ததை தெரிவிக்க வேண்டும் என்று மோடி கேட்டுக்கொள்கிறார். 'தியேரிட்டக்கலான' கருத்துக்களை அவர் விரும்புவதில்லை. செயல் திட்டங்களை மட்டுமே சொல்லச்சொல்லி கேட்கிறார்.

தப்பிக்க முடியாது
மேலும், ஆலோசனை கூட்டங்களில் ஏனோதானோ என்றும் கருத்து கூறிவிட்டு வந்து விட முடிவதில்லை. சந்தேகம் நிவர்த்தியாகாவிட்டால் அடுத்ததாக ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்வதோடு, கடந்த மீட்டிங்கில் சரியாக சொல்லாத பதிலை முழுமையாக தயாரித்து வரும்படி உத்தரவிடுகிறார். சரியான பதிலை அளித்தால், அந்த திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வரச் சொல்கிறார்.

பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அமைச்சரே
அதேபோல ஆலோசனை கூட்டங்களுக்கு நேரந்தவறாமல் வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மோடியின் அமைச்சரவையில் ஆலோசனை கூட்டங்கள் என்பது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனை கூட்டங்களைப்போல உணரச் செய்கிறது.

பட்ஜெட்டால் பளு அதிகம்
அரசு அடுத்த மாதமே பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதால், நிதி, தொழில் மற்றும் வர்த்தகம், உள்கட்டமைப்பு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் முழு நேரமும் வேலைப்பளுவுடனேயே இருக்கிறோம். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் வேலைப்பளு குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஷார்ப்பா 9 மணிக்கெல்லாம்..
அனைத்து மத்திய அமைச்சர்களும், காலை 9 மணிக்கெல்லாம் தங்கள் அலுவலகங்களை வந்தடைய வேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலர்கள் காலை 9.30 மணிக்கெல்லாம், வந்து சேர வேண்டும். அதே நேரம் அமைச்சர்கள் மாலையில் அலுவலகத்தை விட்டு வெளியேறும்வரை அதிகாரிகளும் வீட்டுக்கு கிளம்ப கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர்கள் 'கோரசாக' தெரிவித்தனர்.

24 மணி நேர சேவை
அதிகாரிகள் சிலர் கூறுகையில் "மோடியைப்பார்த்து அவரது அமைச்சர்களும், அதிகாரிகளை நேரம் காலம் பார்க்காமல் போன் செய்து தகவல் கேட்க தொடங்கியுள்ளனர். அதிகாலையோ அல்லது இரவோ எப்போது வேண்டுமானாலும் அமைச்சர்களிடமிருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது" என்று கூறினர். பணி இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதிலும் மோடி மிகுந்த கவனம் செலுத்துகிறாராம்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் பகுதியில் மோடி நேரடியாக விசிட் செய்து சுத்தம், சுகாதாரத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications