மும்பை வேண்டாம், டெல்லிக்குக் கூட்டிட்டுப் போயிருங்க.. பீதியில் சோட்டா ராஜன்
டெல்லி: மும்பை போலீஸார் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. எனவே என்னை டெல்லிக்கு கொண்டு செல்லுங்கள் என்று சோட்டா ராஜன் சிபிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சோட்டா ராஜனைக் கைது செய்துள்ள இந்தோனேசியா போலீஸாரிடமிருந்து அவரைப் பெற்று இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக சிபிஐ குழு பாலி சென்றுள்ளது. இந்தக் குழுவினர் சோட்டா ராஜனைச் சந்தித்து விசாரணையும் நடத்தியுள்ளனர்.
அப்போது மும்பை போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தன்னை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், டெல்லியில் வைத்து விசாரிக்குமாறும் சோட்டா ராஜன் சிபிஐ குழுவினரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.

மும்பையில் வழக்குகள் அதிகம்
மும்பையில்தான் சோட்டா ராஜன் மீது வழக்குகள் அதிகம் உள்ளன. எனவே அவர் மும்பைக்கே கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் தன்னை டெல்லிக்குக் கொண்டு போகுமாறு சோட்டா ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொன்று விடுவார்கள்
இதுகுறித்து சோட்டா ராஜன் சிபிஐ குழுவிடம் கூறுகையில், என்னை முன்பு மும்பை போலீஸார் மிகவும் மோசமாக நடத்தினார்கள். மேலும் அவர்களில் பலருக்கு மற்ற தாதாக்களுடன் தொடர்பு உள்ளது. எனவே என்னை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கக் கூடாது. எனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று கூறினாராம் சோட்டா ராஜன்.

உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும்
இருப்பினும் சோட்டா ராஜனை எங்கு வைத்து விசாரிப்பது என்பதை மத்திய உள்துறை அமைச்சகமே முடிவு செய்யும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனராம்.

டெல்லியில் 6 வழக்குதான்
சோட்டா ராஜன் மீது டெல்லியில் 6 வழக்குகள்தான் உள்ளன. அதேசமயம், மும்பையில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி போலீஸாரும் அதிருப்தி
சோட்டா ராஜனைப் போலவே டெல்லி போலீஸாரும், மும்பையில் சோட்டா ராஜனுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளது. ஏற்கனவே சோட்டா ராஜன் கூட்டாளிகளை வைத்து தாவூத் இப்ராகிமைப் பிடிக்க நடந்த முயற்சியை மும்பை போலீஸார்தான் சீர்குலைத்தனர் என்று டெல்லி காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பரிசீலிக்கலாம்
சோட்டா ராஜன் மிக முக்கியமானவர் என்பதால் மத்திய அரசும் அவரது பாதுகாப்பை அலட்சியப்படுத்தாது. தாவூத் ஆதரவாளர்கள் மும்பை போலீஸார் மத்தியில் இருக்கலாம் என்பதால் சோட்டா ராஜனை தற்காலிகமாக டெல்லியில் வைத்து விசாரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications