வழக்கம் போல உங்க வேலையைப் பாருங்க, பயப்படாதீங்க.. பெங்களூரு மக்களுக்கு காவல்துறை தைரியம் #bengaluru
பெங்களூரு: பெங்களூரு மக்கள் வழக்கம் போல தங்களது பணிகளைப் பார்க்குமாறு மாநகர காவல்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த முறை நடந்த விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது. தமிழர்களின் உடமைகளும், வாகனங்களும் குறி வைக்கப்பட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடியது.
BCP #CitySafe As a Security measure SWAT vehicle has been placed at important places. @CPBlr pic.twitter.com/ABKBxBndI9
— M.G.N. Kumar (@DcpComdCentre) September 20, 2016
வன்முறை கட்டுக்கடங்காமல் போன பின்னரே காவல்துறையும், மாநில அரசும் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கையில் இறங்கின. ஆனால் அதற்குள் பெரும் சேதத்தை சந்தித்து விட்டனர் மக்கள். பெங்களூரும் தனது நற்பெயரை இழந்து விட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த முறை சுப்ரீம் கோர்ட் கூடியபோது 20ம் தேதி வரை தினசரி 12,000 கன அடி நீர் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடகா நேற்று முன்தினமே தண்ணீர் திறப்பை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவையும் அது ஏற்க மறுத்து விட்டது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள விசாரணையில் என்ன மாதிரியான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கவுள்ளது என்று தெரியவில்லை. அதேசமயம், பெங்களூரில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து பெங்களூர் போலீஸார் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
பெங்களூரு முழுவதும 15,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். கலவரத் தடுப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் மக்கள் எந்த பீதியும் அடைய வேண்டாம். வன்முறைகளை நிரகாரியுங்கள். பெங்களூரில் இயல்பு நிலை உள்ளது. அனைவரும் தத்தமது வழக்கமான பணிகளைப் பார்க்கலாம். முக்கிய இடங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் அதி விரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications