சபரிமலை.. பெண் செய்தியாளர்களை அனுப்பாதீங்க.. நிலைமை மோசமாய்ரும்.. இந்து அமைப்புகள் கோரிக்கை
பெண் பத்திரிகையாளர்களை சபரிமலைக்குள் அனுமதிக்காதீர் என இந்து அமைப்புகள் கேட்டு கொண்டுள்ளன.
சபரிமலை: நாளை சபரிமலை நடை திறக்கப்படுவதால் பெண் பத்திரிகையார்களை யாரையும் செய்தி சேகரிக்க அனுப்ப வேண்டாம் என இந்து அமைப்புகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சபரிமலை கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அனல் இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வந்தாலும், கேரள மாநிலம் முழுவதும் போராட்டமாகவே வெடித்தது.
[நாளை மீண்டும் திறக்கிறது சபரிமலை கோவில்.. 2000 போலீசார் குவிப்பு.. பாதுகாப்பு அதிகரிப்பு]
நடை மூடப்பட்டது
எனினும் கோயிலுக்குள் நுழைய ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்பவரும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றபோது, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் கலவரமே நடைபெற்று, தடியடி வரை போய்விட்டது. ஆனால் ஐப்பசி பூஜை முடிவு பெற்றதாக கூறி திறக்கப்பட்ட 5 நாளிலேயே கோயில் நடை மூடப்பட்டது.
கர்மா சமிதி
இந்நிலையில் நாளை காலை நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. சென்ற முறை போல், இந்த முறை எந்தவித கலவரமும், போராட்டமும் நடந்துவிடக் கூடாது என்று சபரிமலை கர்மா சமிதி, விஷ்வ ஹிந்து பரிஷாத், மற்றும் இந்து ஐக்யவேதி போன்ற கேரள இந்து அமைப்புகள் சார்பாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள்
இந்த கடிதத்தினை சபரிமலை கர்மா சமிதி பத்திரிகை நிறுவனத்திற்கு இந்து அமைப்பினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்து அமைப்புகள் தங்கள் கடிதத்தில், நாளை காலை சபரிமலை திறப்பின்போது செய்தி சேகரிக்க எந்த பெண் பத்திரிகையாளர்களையும் அனுப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிலைமை மோசமாகிவிடும்
ஏனெனில் பெண் பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரிக்க வந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்றும், இப்படி ஒரு நிலைமையை பத்திரிகை நிறுவனங்கள் எதுவும் உருவாக்கி விடாது என தாங்கள் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.