மருமகளை பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்.. கூடுதல் வரதட்சணை கேட்டு கொடூரம்
லக்னோ: வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரேதச மாநிலம், கான்பூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மருமகளை அறைக்குள் பூட்டி வைத்து, பாம்பை அறைக்குள் விட்டு மாமியார் கடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
சமீபகாலமாக வரதட்சணை கொடுமைகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வரதட்சணை கொடுமை, வரதட்சணை கொடுமையால் தற்கொலை, கொலை என குற்றச் சம்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

பாம்பு கடி
இந்நிலையில், வரதட்சணை கொடுமையின் உச்சமாக உத்தரப்பிரேதச மாநிலம், கான்பூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மருமகளை அறைக்குள் பூட்டி வைத்து, பாம்பை அறைக்குள் விட்டு கடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை பிரச்சனை
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் ஷாநவாஸ், ரேஷ்மா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனதிலிருந்தே கணவர் குடும்பத்தினருக்கும், ரேஷ்மா குடும்பத்தினருக்கு வரட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
ஷாநவாஸின் குடும்பத்தினர் ரேஷ்மா வீட்டினரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளனர். அவர்களும் பணம் கேட்கும்போதெல்லாம் கொடுத்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ரேஷ்மாவின் மாமியார் கூடுதல் வரதட்சணையாக ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார். ரேஷ்மா வீட்டினர் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இதனால், ரேஷ்மாவின் மாமியார் கடும் கோபமடைந்துள்ளார். நான் கேட்டது 5 லட்சம் ஆனால் நீங்கள் 1.5 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர் என்று கூறி ரேஷ்மாவை அனுதினமும் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
மருமகளை கடித்த பாம்பு
இதனால், கடும் மன உளைச்சளுக்கு ஆளான ரேஷ்மா மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, அந்த அறைக்குள் ஒரு பாம்பையும் விட்டுள்ளார். பாம்பைப் பார்த்தவுடன் பதறிப்போன ரேஷ்மா அந்த அறையில் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடியுள்ளார். பாம்பு ரேஷ்மாவை கடித்ததில் அவர் அலறி துடித்துள்ளார்.
இதனைப் பார்த்து கைதட்டி சிரித்து மாமியார் சந்தோஷப்பட்டுள்ளார். தயவுசெய்து கதவைத் திறந்துவிடுங்கள் என்று ரேஷ்மா கெஞ்சியபோதும் அவரது மாமியார் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் வலியால் துடித்துப்போன ரேஷ்மா எப்படியோ முயற்சி செய்து தனது செல்போன் மூலமாக தனது சகோதரி ரிஸ்வானாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மீட்ட சகோதரி
உடனடியாக ரிஸ்வானா தனது அக்கா வீட்டுக்கு வந்துள்ளார். ஷாநாவாஸின் குடும்பத்தினருடன் கடும் சண்டை போட்டுவிட்டு உடனடியாக தனது அக்காவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குறித்து ரிஸ்வானா காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ரேஷ்மாவின் கணவர் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications