சுனந்தா வழக்கில் தரூர் மீது குற்றம்சாட்டிய எய்ம்ஸ் டாக்டரிடம் டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர் குப்தாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். இந்நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அண்மையில் அறிவித்தனர்.

சுனந்தாவின் உடலை டாக்டர் குப்தா தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து மூன்று அறிக்கைகள் அளித்தன. கடந்த மாதம் 29ம் தேதி அளிக்கப்பட்ட அறிக்கையில் தான் சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் போலீசார் சுனந்தா வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
இந்நிலையில் துணை கமிஷனர் பி.எஸ். குஸ்வாஹ், இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு டாக்டர் குப்தாவிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அவரிடம் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் அவருக்கு தரூர் அனுப்பிய இமெயில்கள் குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்ற தரூர் முயற்சி செய்வதாக முன்பு குப்தா தெரிவித்தார். பின்னர் தரூர் தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டார். இது பற்றியும் குப்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சுனந்தா இறந்ததற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தரூர் என்னென்ன செய்தார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications