குடிசைகளை இடிப்பதற்கு முன் புல்டோசரை என் மீது ஏற்றுங்கள்: ராகுல் ஆவேசம்
டெல்லி: ஏழைகளின் குடிசைகளை அகற்றுவதற்கு முன்பு என் உடலில் புல்டோசரை ஏற்றுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
தெற்கு டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியை அடுத்துள்ள ரங்பூர் பஹாடி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளை சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகை எதிரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே ரங்பூர் பஹாடி குடிசைப் பகுதிக்கு ராகுல் காந்தி திடீரென சென்றார்.
குடிசைவாழ் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்னைகள் குறித்துக் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி. குடிசைகளை இடித்து அவர்கள் இந்த முறை ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற மீண்டும் இயந்திரத்தை பயன்படுத்த விரும்பினால், அதை எனது உடல் மீது ஏற்றிச் செல்லட்டும்.
இதுபோன்ற செயல்கள் மூலம் மத்திய அரசு ஏழை மக்களைத் துன்புறுத்தி வருகிறது. தற்போது குளிர்காலம் நிலவுகிறது. இச்சூழலில் குடிசை மக்களின் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்தி வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுபோன்று அப்பாவிப் பொதுமக்களைத் துன்புறுத்தினால் கடும் விளைவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குடிசைகள் அகற்றப்பட்ட ரங்பூர் பஹாடி பகுதி மக்களைச் சந்திப்பதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.