விதிமீறல் புகார்கள் குறித்து கடைசி வரை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்.. மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஆளும் கட்சிக்கு இணையாக, பாஜக-வும் வெற்றி பெற்று மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த முறை நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, மேற்கவங்கத்தில் பாஜக 5-க்கும் குறைவான இடங்களையே வென்றிருந்தது.
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய மம்தா இந்த முறை மேற்குவங்கத்தில் பாஜக வீழ்வது நிச்சயம் என உறுதியாக கூறினார். ஆனால் வெளிவந்த தேர்தல் முடிவுகளை பார்த்து ஆடி போய்விட்டார் மம்தா.
ஸ்டாம்ப் சைஸ் நரகம்.. 24 மணி நேர போதை.. வேற லெவலுக்கு மாறிய புதுவை கும்பல்!
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மோடி மற்றும் அமித்ஷா மீது கூறப்பட்ட தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என சாடினார்.
மேற்குவங்கத்தில் எனது தலைமையிலான அரசை மத்தியில் இருந்த பாரதிய ஜனதா அரசு செயல்படவிடவில்லை என்றார். மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து நான் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை.
எனது இந்த முடிவை கட்சியினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வேண்டுமென்றே மேற்குவங்கத்தில் அவசர நிலை உருவாக்கப்பட்டது.
இந்து - முஸ்லிம் என்ற கருத்துகளை முன்வைத்து பாஜக நடத்திய பிரிவினை, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு நன்றாக கை கொடுத்துள்ளது. இதனால் வாக்குகளில் பிளவு ஏற்பட்டது என்றார். இந்த நிலை தொடர்பாக எவ்வளவு முறை புகார் கூறியும் தேர்தல் ஆணையம் கடைசி வரை கண்டுகொள்ளவே இல்லை என சாடினார்.