மைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம்.. குவியும் பக்தர்கள்
மைசூர் தசரா விழா இன்றுடன் முடிவடைகிறது. குலசேகரபட்டினத்தில் மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறவுள்ளதால் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.
மைசூரு: இன்று விஜயதசமி விழாவுடன் 10 நாள்கள் நடைபெற்று வந்த மைசூர் தசரா விழா முடிவடைகிறது.
மைசூரில் 407-ஆவதுஆண்டு தசரா விழா கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நாடு முழுவதும், தசரா, விஜயதசமி என்று பகுதிக்கு பகுதிக்கு பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டது. மைசூரில் தசரா விழாவையொட்டி இன்று அலங்கரிக்கப்பட்ட யானைகின் ஊர்வலம் நடைபெற்றது.

கடந்த 15-ஆவது ஆண்டு முதல் விஜயநகர மன்னர்களால் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றியின் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழா சாமுண்டீஸ்வர் ரூபத்தில் உள்ள துர்க்கைக்காக கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்ததாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
விழாவையொட்டி, மைசூரு அரண்மனையிலிருந்து பன்னி மண்டபத்துக்கு 12 யானைகள் சாமுண்டீஸ்வரியின் தங்க விக்கிரகத்தை ஊர்வலமாக கொண்டு சென்றன. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 52 வயதுடைய ஆசிய யானையான அர்ஜுனா 750 கிலோ எடை கொண்ட அம்பாரியை கொண்டு சென்றது.
தசரா விழா ஊர்வலம் மைசூர் மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ஊர்வலத்தை முதல்வர் சித்தராமையா இன்று மதியம் தொடங்கிவைத்தார். 21 முறை குண்டுகள் முழங்க யானைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படும் சாமுண்டீஸ்வரிக்கு முதல்வர் பூஜை செய்தார்.
அதன் பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மிகவும் பிரசித்தி பெற்ற தசரா விழா குலசேகரபட்டினத்தில் உள்ள புகழ் பெற்ற ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் கோயிலில் கடந்த 10 நாள்களும் கொண்டாடப்பட்டது. இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம் விழா நடைபெறவுள்ளதால் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சில செய்தி தொலைக்காட்சி சேனல்களில் சூரசம்ஹாரம் நள்ளிரவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications