"பப்பு புவா" தராததால் கோபம்...ஹோட்டல் உரிமையாளர் மீது வாடிக்கையாளர்கள் வெறி தாக்குதல்
டெல்லி: டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் பருப்பு சாப்பாடு தராதது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் உரிமையாளரை வாடிக்கையாளர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பருப்பு விலை அதிகரித்துள்ளது. பற்றாக்குறையை நீக்க பருப்பை அரசு இறக்குமதி செய்து வருகின்றது. மேலும், பருப்பை பதுக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பருப்பு விலையேற்றத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஹோட்டல்களிலும் பருப்பு உணவுகளின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியின் சரோஜினி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பருப்பு சாப்பாடு கேட்டு 8 பேர் ரகளை செய்துள்ளனர். அவர்கள் கேட்ட பருப்பு உணவு வழங்கப்படவில்லை என அவர்கள் தகராறு செய்துள்ளனர்.
இதனை ஹோட்டலின் உரிமையாளர் குல்தீப் சிங்(30) கண்டித்துள்ளார். இதனால், சாப்பிட வந்தவர்களுக்கும், குல்தீப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியதில் குல்தீப் சிங்கை சாப்பிட வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த குல்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.