இரட்டை இலை சின்னம் விசாரணை அக்.30க்கு ஒத்திவைப்பு! தினகரன் தரப்பு தாமதப்படுத்துவதாக புகார்!
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணை அக்டோபர் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந் தேதி நடைபெற்ற 2-வது கட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஓபிஎஸ் அணியினர் போலி பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதாகவும் தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்போ, அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர் தினகரன்; ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். அவரால் அதிமுகவுக்கோ, அதிமுகவின் சின்னத்துக்கோ உரிமை கோர முடியாது என வாதிட்டது.
ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகினர். தினகரன் சார்பில் மாஜி அமைச்சர் அஸ்வினினிகுமார் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்றைய தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இன்று 3-வது கட்ட விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். தினகரன் தரப்பில் அபிஷேக் சிங்வி ஆஜரானார். இன்றைய வாதங்களைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முகுல் ரோத்தகி, தினகரன் தரப்பு வழக்கை தாமதப்படுத்த முயற்சிக்கிறது. அக்டோபர் 30-ந் தேதி நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்க வேண்டும். ஏனெனில் நவம்பர் 10-க்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications