அவரை மட்டும் ஏன் கைது செய்யவில்லை?: டிடிவி தினகரனை சிக்கலில் மாட்டிவிட்ட சுகேஷ் வக்கீல் கேள்வி
"ஏன் தினகரன் கைது செய்யப்படவில்லை? சுகேஷுக்கு காவல் நீட்டிப்பு கேட்பது ஏன்? " என வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
டெல்லி: டிடிவி தினகரன் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் கோர்ட்டில் கேள்வி எழுப்பினார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கரிடம், டிடிவி தினகரன் பணம் கொடுத்தாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து சுகேஷை கைது செய்துள்ளது. டிடிவி தினகரனிடம் தினமும் தொடர் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில்தான், டெல்லி கோர்ட்டில் நீதிபபதி பூனம் சவுத்ரி முன்னிலையில், இன்று சுகேஷ் சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கில் தினகரன் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
"ஏன் தினகரன் கைது செய்யப்படவில்லை? சுகேஷுக்கு காவல் நீட்டிப்பு கேட்பது ஏன்? " என வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
விசாரணையின்போது, தான் துன்புறுத்தப்பட்டதாகவும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யார் தன்னை விசாரித்தனர் என்று தனக்கு தெரியாது என்றும், பெயர் பேட்ஜ் அணிந்துதான் விசாரித்திருக்க வேண்டும் என்றும் அவர் சார்பில் வழக்கறிஞர் வாதம் எடுத்து வைத்தார்.
சென்னையிலிருந்து வந்த பணத்தை சுகேஷ் பெற்றுக்கொண்டதாக ஹவாலா ஏஜென்ட் ஷா பைசல் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ள தகவலை டெல்லி போலீசாரா் கோர்ட்டில் தெரிவித்தனர். குற்றத்தின் தன்மை பெரியதாக இருப்பதாகவும், தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மையை குறைக்கும் செயல் எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்
இதையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் ஏப்ரல் 28ம் தேதிவரை நீடிக்கப்பட்டது. சுகேஷ் முன்னிலையில் தினகரனை அழைத்து வந்து விசாரிக்க டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.