ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக 3-வது முறையாக அமலாக்கப் பிரிவு சம்மன்
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கப் பிரிவு 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் வந்துள்ளது. சர்ச்சைக்குரிய மேக்சிஸ் குரூப்தான் 2007 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணத்தை கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சராகவும் சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அவர்தான் ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்க அனுமதி வழங்கினார்.
இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக ஏற்கனவே 2 முறை அமலாக்கப் பிரிவு கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தமக்கு கால அவகாசம் வேண்டும் என கார்த்தி கோரியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.