ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடுக.. மோடியிடம் எடப்பாடியார் நேரில் கோரிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்தார்.
டெல்லி: பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று அவரை சந்தித்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் வைத்தார்.
முக்கியமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட அவர் கோரிக்கை வைத்தார். அதுதவிர வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும், வர்தா புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் பிரதமர் மோடியிடம் வைத்தார்.
முதல்வரின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு பிரதமர் அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.