தெலுங்கானாவில் பயங்கர துப்பாக்கிச் சண்டை- 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
தெலுங்கானாவில் பாதுகாப்புப் படையினரால் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கோதகுடேம்: தெலுங்கானாவில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
தெலுங்கானாவின் பத்ராத்ரி கோதகுடேம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததது. இதையடுத்து தேகுலபள்ளி என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அந்த கிராமத்தில் மொத்தம் 17 மாவோயிஸ்டுகள் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. இம்மோதலில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 9 பேர் தப்பி ஓடினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந்திரா- ஒடிஷா எல்லைகளில் பதுங்கி இருந்தனர். அதன் பின்னர் கம்மம், வாரங்கல் மாவட்டங்களில் பதுங்கி பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வந்தனர்.