கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல்.. 15ல் வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Recommended Video
டெல்லி: கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் ஆட்சி காலம் அங்கு முடிவடைகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.
திடீர் ரத்து
இன்று அவர் மீண்டும் பெங்களூருவுக்கு வந்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இருந்தார். ஆனால் அவருடைய பெங்களூரு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் அவருடைய தலைமையில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளின், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பு
இந்த கூட்டத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி, இதன் முடிவில், காலை 11 மணிக்கு நிருபர்களை சந்தித்தார் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்.
தேர்தல் அட்டவணை
அப்போது, 224 தொகுதிகளை கொண்ட, கர்நாடக சட்டசபைக்கு, மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அவர் அறிவித்தார். மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தல் அறிவிக்கை, ஏப்ரல் 17ல் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கலும் துவங்கும். ஏப்ரல் 24ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 25ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். ஏப்ரல் 27ம் தேதி, வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
நடத்தை விதிமுறைகள்
இந்த தேர்தலில், 4.96 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 56,696 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்டதால், கர்நாடகாவில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் வளர்ச்சி திட்டப்பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியாது.