4 காலியிடங்கள்.. அக்டோபர் 24ல் ஜம்மு காஷ்மீரில் ராஜ்யசபா தேர்தல்.. அறிவித்த தேர்தல் ஆணையம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2021ம் ஆண்டு முதல் காலியாக உள்ள 4 ராஜ்யசபா இடங்களை நிரப்பும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 24ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜ்யசபா தேர்தல் நடத்தி 4 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீரில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் அக்டோபர் 24ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 13ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

அதன்பிறகு அக்டோபர் 14ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 16 கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அக்டோபர் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா தேர்தல் நடக்கும். பிறகு அன்றைய தினம் 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ராஜ்யசபா எம்பியாக இருந்த பிடிபி கட்சியின் மிர் முகமது பயாஸ், நசீர் அகமது லாவே, பாஜக எம்பி ஷம்சீர் சிங் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 2021ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து துணை நிலை ஆளுநர் மேற்பார்வையில் ஜம்மு காஷ்மீர் இருந்தது. எம்எல்ஏக்கள் இல்லாததால் ராஜ்யசபா தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 4 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications