உத்தரப் பிரதேசத்தில் அமித் ஷா, ஆஸம் கான் பிரசாரம் செய்ய தடை!
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில், அமித் ஷா, ஆஸம் கான் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் ஆஸம் கான் ஆகிய இருவரும் உத்தரப்பிரதேசத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் மற்றும் சாலையோரப் பிரசாரக் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
உ.பி மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமித் ஷா, 'முசாஃபர்நகர் கலவரத்துக்கு வாக்குப்பதிவு மூலம் பழிவாங்குங்கள். பாஜகவுக்கு வாக்களியுங்கள்' என்று அவர் கூறியிருந்தார்.
இதேபோல், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரப்பிரதேச அமைச்சருமான ஆஸம் கான் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், 'கார்கில் வெற்றிக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள்தான் காரணம். அவர்கள்தான் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்' என்று தெரிவித்திருந்தார்.
இவர்களின் இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இரு தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக விவாதிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்தின் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது.
அதில், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அமித் ஷா மற்றும் ஆஸம் கான் ஆகிய இருவரும் உத்தரப்பிரதேசத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் மற்றும் சாலையோரப் பிரசாரக் கூட்டங்களை நடத்த தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications