தேர்தல் தோல்வி: ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகினார் 'முட்டுக்கட்டை' கமல்நாத்!
போபால்: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை முன்னாள் முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்துள்ளார். ம.பி.யில் பெரும் தோல்வியை காங்கிரஸ் சந்தித்ததால் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் கமல்நாத்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் பாஜக தோல்வியைத் தழுவும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் மத்திய பிரதேச தேர்தலில் பாஜக 163 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்கள்தான் கிடைத்தன.
மத்திய பிரதேசத்தில் சீனியரான கமல்நாத் போன்றவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொண்டு பாஜகவுக்கு இணையான மென்மையான இந்துத்துவா போக்கை கையில் எடுத்து பிரஆரம் செய்ததால்தான் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இளையவர்களுக்கு வழிவிட்டு கமல்நாத் போன்றவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்கிற குரல்களும் வலுத்தன.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்களை கமல்நாத் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனையடுத்து தற்போது கமல்நாத் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில புதிய காங்கிரஸ் கமிட்டித் தலைவரை விரைவில் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் போன்ற சீனியர்கள் முட்டுக்கட்டையாக இருந்ததாலேயே ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்தனர் என்பதும் வரலாறு.












Click it and Unblock the Notifications