சபரிமலை: பாகனை மிதித்து கொன்ற மதம் பிடித்த யானை
சபரிமலை: சபரிமலை அருகே மதம் பிடித்த யானை ஒன்று பாசமாக பழகிய பாகனை மிதித்து துவம்சம் செய்து கொன்றது. யானையின் அட்டகாசத்தை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓடினர்.
சபரிமலையை அடுத்த பம்பை எரிமேலியைச் சேர்ந்தவர் சலீம். இவர் மீரா என்ற யானையை வளர்த்து வந்தார். இதற்கு கொல்லத்தை சேர்ந்த மது உள்பட 2 பேர் பாகன்களாக இருந்தனர்.
திங்கட்கிழமையன்று ஒரு பாகன் யானையை அருகில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றார். வழியில் திடீரென யானைக்கு மதம் பிடித்தது. தகவல் அறிந்து இன்னொரு பாகன் மது விரைந்து வந்தார். அவர் யானையை அடக்க முயன்றார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த யானை, பாகன் மதுவை தும்பிக்கையால் சுற்றி வளைத்து தரையில் அடித்தது. அதன்பிறகும் ஆத்திரம் தணியாமல் காலால் ஓங்கி மிதித்தது.
யானையின் இந்த செயல்பாட்டினைக் கண்ட ஊர் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்த வன அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு யானை மயங்கி சாய்ந்தது. அதன்பிறகே யானையின் பிடியில் இருந்த பாகன் மதுவை மீட்டு கோட்டக்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாகன் மது இறந்து போனார். இதுபற்றி கோட்டக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.