சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. 18 பேர் சுட்டுக்கொலை.. தலைக்கு ரூ. 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டவரும் பலி
ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள கன்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்டர் நடைபெற்றது. இந்த மோதலில் நக்சலைட்டுகள் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிகம் அதிகம் உள்ள இடங்களில் ஒன்றாக உள்ளது. நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில், நக்சலைட்டுகள் 18 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுகொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் மூத்த தலைவரும் அடங்குவார்.. தலைக்கு 25 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்த சங்கர் ராவ் உள்பட 18 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை தரப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏகே 47 ரைபிள்ஸ் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நக்சலைட்டுகளுக்கு எதிரான ஆப்ரேஷன் தொடங்கியதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக 2008 ஆம் ஆண்டு மாவட்ட ரிசர்வ் படை அமைக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில போலீசாரின் ஒரு பிரிவான இந்த ரிசர்வ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை பிரிவு இணைந்த பாதுகாப்பு படை குழு நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளது. அப்போது கன்கேர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதை அடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications