ஒடுக்கப்பட்டோருக்கு நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் தேவை: தலைமை நீதிபதி சதாசிவம்
டெல்லி: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் இன்று ஓய்வு பெற்றார். அவர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: ஓய்வுக்கு பின்பு என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்? ஏதேனும் முக்கிய பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: ஓய்வு பெற்ற பின்பு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அல்லது லோக்பால் அமைப்பின் தலைவர் என்று எந்த பதவியையும் ஏற்பதில் எனக்கு வெறுப்பு இல்லை. எந்தவொரு முன்னாள் தலைமை நீதிபதிக்கும் அது பொருத்தமான ஒன்றுதான். எனினும் எந்த முடிவு என்றாலும் அது ஒருமனதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வேன்.
அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம்
கேள்வி: நீதிபதிகளை தேர்வுக்குழு மூலம் நியமிக்கும் தற்போதைய முறை கைவிடப்படவேண்டுமா? அல்லது இதில் அரசின் சம்மதம் பெறப்படவேண்டுமா?
பதில்: நீதித்துறைக்கு அப்பாற்பட்டு வெளியில் இருந்து ஒருவர் இதில் சேர்க்கப்பட்டால் நிச்சயமாக அவர் நீதித்துறை பற்றி அறியாதவராகத்தான் இருப்பார். எனவே இதுபோல் நீதிபதிகளை தேர்வு செய்யும் முறை சரியாக இருக்காது. அமைச்சரவை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் போன்ற பதவிகளின் குறைந்த பட்ச பதவிகாலத்தை எவ்வாறு 2 ஆண்டுகள் என நிர்ணயம் செய்து இருக்கிறார்களோ, அதே போல உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் பதவிக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் அவரால் கூடுதலாக பணியாற்ற இயலும். ஏனெனில் குறுகிய கால பதவி என்கிறபோது பொறுப்பேற்றவுடன் அதனை அறிந்து கொள்ளவே 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகிவிடுகிறது. உயர் நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், சிறுபான்மை பிரிவினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.
இவ்வாறு தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
பிரிவு உபசார விழா
முன்னதாக சதாசிவம் ஓய்வு பெறுவதையொட்டி உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பாக அவருக்கு பிரிவு உபசரிப்பு விழா டெல்லியில் நேற்று மாலை நடத்தப்பட்டது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் கியான் சுதா மிஸ்ராவுக்கும் பிரிவு உபசரிப்பு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் புதிய தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி ஆர்,எம்.லோதா, நீதிபதிகள், பார் அசோஷியேஷன் தலைவர் பாரிக், சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications