உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வாரமாச்சு.. ஒரு சொட்டு தண்ணீரும் திறக்காத கர்நாடகா! #cauvery
டெல்லி: உச்சநீதிமன்றம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டு ஒரு வாரமாகியும், தண்ணீர் திறக்க, கர்நாடக அரசு மறுத்து வருவதால், தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடி பொய்த்துவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழக தேவைக்காக, ஆண்டு தோறும் காவிரியிலிருந்து கர்நாடகா வழங்க வேண்டிய, 192 டி.எம்.சி தண்ணீரில், இந்தாண்டு, ஜூன் முதல் செப்டம்பர் வரை வழங்க வேண்டிய 81 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை.
இதையடுத்து தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறக்க, இம்மாதம் 18ல் மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும்வரை இந்த தண்ணீரை வழங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.
ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஒரு சொட்டு தண்ணீரையும், கர்நாடகா தனது அணைகளில் இருந்து திறக்கவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. எனவே, நீதிமன்றத்தை அணுகுவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.