நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களின் எலும்பையாவது கண்ணில் காட்டுங்கள்.. உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை
ஷில்லாங்: மேகாலயாவில் வெள்ளநீர் சூழ்ந்த நிலக்கரி சுரங்கில் சிக்கியவர்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் அவர்களின் எலும்பையோ அல்லது விரலையோ கொண்டு வாருங்கள் என உறவினர்கள் மீட்பு படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, சுரங்கத்தின் அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பின்னர் வெள்ள நீர் சுரங்கத்தினுள் புகுந்தது. இதனால் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

நீர் வெளியேற முடியவில்லை
தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

உயிர் பிழைக்க
பின்னர் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை அனுப்பி வைத்தது. அவர்கள் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கம் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், தொழிலாளர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை.

200 அடி
சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரின் உடலை கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் இன்று மீட்டுள்ளனர். ரிமோட் மூலம் இயங்கக்கூடிய ஆர்ஓவி எனும் நீர்மூழ்கி உபகரணம் மூலம் தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல், எலிப்பொந்து என்று அழைக்கப்படும் சுரங்கத்தின் முகப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

எலி பொந்து
எலி பொந்தில் சிக்கிய 15 பேரில் 4 பேரது குடும்பத்தினர் நேற்றைய தினம் மீட்பு படையினரை சந்தித்து ஒரு கோரிக்கையை வைத்தனர். அதில் சிலர் எங்களுக்கு அவரது அழுகிய உடலானாலும் அதை மீட்டு கொடுங்கள். நாங்கள் இறுதி சடங்கை செய்து கொள்கிறோம் என்றனர்.

விரல்
இன்னும் சிலரோ உடல் கொண்டு வரமுடியாவிட்டாலும் அவர்களின் எலும்பு, விரலையாவது கொண்டு வாருங்கள். அதை வைத்தாவது நாங்கள் இறந்தவர்களுக்கு உரிய இறுதிச் சடங்குகளை செய்து கொள்கிறோம் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இவர்கள் சிக்கி 35 நாட்கள் ஆன நிலையில் மீட்பு படையினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications