ஒவ்வொரு ஓட்டும் பாஜகவின் அட்டூழியங்களுக்கு எதிரான ஆயுதம்.. ஹரியானா தேர்தல்.. ராகுல் காந்தி ட்வீட்!
குர்கான்: ஹரியானாவில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் மற்றும் பாஜகவின் அட்டூழியங்களுக்கு எதிரான உங்கள் ஆயுதமாக மாறும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இரண்டு கோடியே மூன்று லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 90 தொகுதிகளில் 1,031 வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயன்று வருகிறது. அதேநேரம் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளுடன் ஹரியானா தேர்தல் முடிவுகளும் வரும் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹரியானாவின் சகோதர சகோதரிகளே, இன்று மாநிலத்தில் மிக முக்கியமான தேர்தல் - மாநில மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் செழிப்புக்காக, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்காக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக, ஒவ்வொரு பிரிவினரின் பிரநிதித்துவத்துக்காக, சமூக பாதுகாப்புக்காக, ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக காங்கிரஸுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் மற்றும் பாஜகவின் அட்டூழியங்களுக்கு எதிரான உங்கள் ஆயுதமாக மாறும்.
ஹரியானாவில் 36 சமூகங்களின் ஆட்சியை அமைக்க வேண்டும், அனைவரின் பங்கேற்புடன் கூடிய அரசு, நீதிக்கான அரசு - காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "பாஜகவால் உருவாக்கப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் ஹரியானாவின் வேர்களையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் பாதுகாப்பையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. இன்று இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலம் ஹரியானா. இதற்குக் காரணம் - கடந்த பத்தாண்டுகளில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒவ்வொரு அமைப்பின் முதுகெலும்பையும் பாஜக உடைத்துவிட்டது.
போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் திறமை வீணாகிறது. விரக்தியடைந்த இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். குடும்பங்கள் சீரழிகின்றன. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும்; போதையில்லா மாநிலமாக மாற்றப்படும். ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications