திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு- சோனியா, ராகுலுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை
டெல்லி: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார். இதனால் திமுக தரப்பு 25 தொகுதிகளைத்தான் தர முன்வந்துள்ளதாம்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினரோ, தேமுதிக வருவதாக இருந்ததால் 25 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருந்தோம். தற்போது அக்கட்சி தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. ஆகையால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரி வருகிறது.
இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், இன்று சோனியா, ராகுலை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்தும் இருவரிடமும் இளங்கோவன் விவரித்ததாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் குழு அமைப்பு
இதனிடையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தனித்துப் போட்டி என்ற தவறான முடிவை விஜயகாந்த் ஏன் எடுத்தார் எனத் தெரியவில்லை; திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கான குழு விரைவில் அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications