ஈவிஎம் முறைகேடு... ஊழல் புகார்... டெல்லி சட்டசபையில் பாஜக - ஆம் ஆத்மி மல்லுக்கட்டு
மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறிய புகாருக்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் மீதான ஊழல் புகார் குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பியதால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
கடும் அமளிக்கிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது எப்படி என்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ இன்று சட்டசபையில் செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. இது ஒரு பக்கம் தலைவலி என்றால் உட்கட்சி பிரச்சினையை சமாளிக்க கெஜ்ரிவாலுக்கு நேரம் போதவில்லை.

கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார்
டெல்லி மாநில அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சத்யேந்திர ஜெயின் இருந்து கெஜ்ரிவால் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், கெஜ்ரிவாலின் உறவினர் சுரேந்தர் குமார் பன்சாலுக்கு 50 கோடி ரூபாய் நில விவகாரத்தில் அவர் உதவியதாகவும் கபில் மிஸ்ரா குற்றம்சாட்டி இருந்தார். லஞ்சம் தொடர்பாக கபில் மிஸ்ரா சி.பி.ஐ., அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் கூறினார். இதனை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்

சிறப்பு சட்டசபை கூட்டம்
பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியது. டெல்லி மாநகராட்சி தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.

கூச்சல் குழப்பம்
இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீதான லஞ்ச ஊழல் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். பாஜக எம்எல்எ விஜேந்தர் குப்தா, அதிகமாக கூச்சலிட்டதோடு ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.

குண்டு கட்டாக வெளியேற்றம்
இதனையடுத்து பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தாவை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அவை காவலர்கள் விஜேந்தரை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு போய் வெளியேற்றனர். அவரை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். எனினும் விஜேந்தர் குப்தா அவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

முறைகேடு செய்ய முடியும்
பிற்பகலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது, அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு வந்து செயல்முறை விளக்கம் அளித்தார். பாஜகவினர் எவ்வாறு முறைகேடு செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications