ஆளும்கட்சி பிரமுகர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம்.. காரணத்தை கேட்டால் செம ஷாக்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இதுவரை 60 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அங்கு மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 30 தொகுதிகளில் அங்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆளும்கட்சி பிரமுகர் வீட்டில்
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் உலுபீரியா உத்தர் என்ற பகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலுபீரியா உத்தரில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரமும் இருந்ததைத் தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மக்கள் போராட்டம்
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பகுதிக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் நேற்றிரவு, திரிணாமுல் பிரமுகர் வீட்டில் தங்கியதாகவும், அப்போது அவருடன் வாக்குப்பதிவு இயந்திரம் இருந்ததாகவும் மூத்த தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளதாக அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இது குறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த குறிப்பிட்ட தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளோம். கட்சி பிரமுகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படாது. புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும். இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தெரியப்படுத்தி விட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் முறை
இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், அசாம் மாநிலத்தில் வாக்குப்பதிவுக்குப் பிறகு, இயந்திரம் பாஜக வேட்பாளரின் காரில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்லும்போது, காரில் கோளாறு ஏற்பட்டதால் அங்கு வந்த காரில் லிஃப்ட் கேட்டதாகவும் அது வேட்பாளரின் கார் என தெரியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications