கதறிய பெண்கள்! செத்தாலும் சாவேனே தவிர! டெல்லிக்கு போய் லாபி செய்ய மாட்டேன்! சிவராஜ் சிங் சவுகான்
போபால்: நான் எனக்காக யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன். அதற்கு பதில் நான் உயிரிழப்பேன் என தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் கதறி அழுத ஆதரவாளர்களிடம் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த நிலையில் 3 மாநிலங்களிலும் யார் முதல்வர் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வந்தன. மத்திய பிரதேசத்தை பொருத்தமட்டில் நீண்ட காலமாக முதல்வராக இருந்து வருபவர் சிவராஜ் சிங் சவுகான்.
அதாவது சவுகான் 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையும் 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையும் 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையும் 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை என மொத்தம் 16 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். எனவே இந்த முறையும் அவருக்கே முதல்வர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. புதிய முதல்வராக டாக்டர் மோகன் யாதவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதனால் சிவராஜ் சிங்கின் ஆதரவாளர்கள் கவலை அடைந்தனர். பெண் ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டனர். சிவராஜ் சிங் சவுகானை பார்த்ததும் விம்மி அழுதனர்.
இதையடுத்து அவர்களை சவுகான் சிங் சமாதானப்படுத்தினார். இந்த நிலையில் முதல்வர் வீட்டிலிருந்து கிளம்பிய சவுகான் கூறுகையில் எனக்காக யாரிடமாவது எதையாவது கேட்பதற்கு பதில் நான் சாவதே மேல். கட்சிக்காக உழைப்பேன். இதுதான் என் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். கட்சி என்ன வேலை கொடுக்கிறதோ அதை செய்வேன்.
பாஜக எப்போதும் பொதுமக்கள் நலனுக்காக பாடுபடும் ஒரு கட்சியாகும். அது போல் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கட்சியாகவும் இது இருக்கிறது. டெல்லிக்கு போய் லாபி செய்வதெல்லாம் எனக்கு தெரியாது. அது எனக்கு தெரியாது. அது என் வேலையும் இல்லை என்பதால்தான் நான் டெல்லிக்கு போகவில்லை.
மத்திய பிரதேசத்தில் பாஜக வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் எனக்கு திருப்தியாக உள்ளது. முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான ஆட்சி நம் மாநிலத்தை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன். எனக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லை. சாதாரண தொண்டனான நான் 16 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளேன். இதை விட வேறு என்ன வேண்டும்.
செடி நடுதல் என்பது எனக்கு பிடித்தமான விஷயம். புதிய முதல்வர் டாக்டர் மோகன் யாதவிடம் நான் கேட்பது ஒன்றுதான், நான் செடி நடுவதற்கு அரசு நிலத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications