லஞ்சம் கொடுத்த கெஜ்ரிவால் மகள் மீது நடவடிக்கை எடுங்கள்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
டெல்லி: அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெல்லியின் தலைமை செயலாளராக இருந்தவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒமேஷ் சாய்கல். அவர் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் எஸ்.எஸ். யாதவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது மகள் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் வாங்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததை சரிபார்த்து ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் பிரிவு 12ன் கீழ் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு குறைந்தது 6 மாதம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும். எனவே லஞ்சம் கொடுத்த கெஜ்ரிவாலின் மகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பகத் சிங் கிராந்தி சேனா அமைப்பின் தலைவர் தஜிந்தர் பால் சிங் பாகாவும் கெஜ்ரிவாலின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.