கேரளாவில் கள்ளத் தொடர்பு குற்றங்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரிப்பு: சமூக நல வாரியம்
கன்னூர்: கேரளாவில் கள்ளத்தொர்புகள் அதிகரித்துள்ள நிலையில் இதை கட்டுப்படுத்த திருமணத்துக்கு முன்பே ஆணுக்கும் பெண்ணுக்கும் கவுன்சலிங் அளிப்பது அவசியம் என்கிறார் அம்மாநில சமூக நல வாரியத்தின் பெண் தலைவரான கமருன்னிசா அன்வர்.
கன்னூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய கமருன்னிசா கூறியதாவது: 2013-14ம் ஆண்டுகளில் கேரளாவில் மொத்தம் 3,406 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 845 வழக்குகளும், எர்ணாகுளத்தில் 387 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் வழக்குகளும் திருவனந்தபுரத்தில் அதிகம் பதிவாகியுள்ளன.

இந்த வழக்குகளில் 672 வழக்குகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை. சமூக நல வாரியத்திடம் பதிவாகியுள்ள வழக்குகளில் கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்குகள் 16 சதவீதம் ஆகும். கள்ளத்தொடர்பு அதிகரிக்க சமூக வலைத்தளங்களும், செல்போன்களும் முக்கிய பங்காற்றுகின்றன. 61 சதவீத வழக்குகள் குடிபோதையில் கொடுமைப் படுத்துவது தொடர்பானதாக உள்ளன.
திருமணத்துக்கு பிந்தைய கள்ளத்தொடர்பு எண்ணிக்கை ஆபத்தான கட்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகு கள்ளத்தொடர்பு ஏற்பட்ட காலம் மாறிப்போய், சமீபத்தில் திருமணமான தம்பதிகள் கூட கள்ளத்தொடர்பில் சிக்கிக்கொள்வது அதிகரித்துள்ளது. இதுபோன்ற பிரச்சினையை தவிர்க்க திருமணத்துக்கு முன்பே, ஆணுக்கும், பெண்ணுக்கும் கவுன்சலிங் கொடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications