அடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்தது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாமை நடத்தி, திரிணாமுல் எம்பி மிமி சக்ரவர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்குப் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு இப்போது குறைந்துள்ளதால் இதைப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

போலி தடுப்பூசி முகாம்
முன்பு கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தபோது போலி மருந்துகள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் அதெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாமையே சிலர் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக் கணக்கானோருக்குப் போலி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

திரிணாமுல் எம்பி
நடிகையும் திரிணாமுல் எம்பி மிமி சக்ரவர்த்தியும் இந்தப் போலி முகாமிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றுள்ளார். அங்கேயே அவர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து சில மணி நேரம் ஆன பிறகும்கூட தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் அவருக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலேயே போலி தடுப்பூசி முகாம் குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

மிமி சக்ரவர்த்தி
இது குறித்து திரிணாமுல் எம்பி மிமி சக்ரவர்த்தி கூறுகையில், ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு மூன்றாம் பாலினத்தவருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தடுப்பூசி முகாமை நடத்துவதாகவும் அதில் சிறப்பு விருந்தினராக என்னைக் கலந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுத்தார். அங்கு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நான் வேவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

250 பேர்
ஆனாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான உறுதி செய்யும் மெசேஜ் எனக்கு வரவில்லை. அங்கு சுமார் 250க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தடுப்பூசி போட வந்தவர்களின் ஆதார் தகவல்களை அவர்கள் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். ஆனாலும், உறுதிப்படுத்தும் மெசேஜ் வரவில்லை. அதனால் தான் நான் புகார் அளித்தேன்" என்றார். போலி வேக்சின் முகாமில் ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவருக்கே போலி தடுப்பூசி போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் கைது
போலி தடுப்பூசி முகாமில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட தெற்கு கொல்கத்தாவைச் சோர்ந்த டெபஞ்சன் தேவ்வை போலீசா் கைது செய்தனர். இருப்பினும், பலருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கு தற்போது கொல்கத்தா புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களுக்குப் போடப்பட்ட தடுப்பூசி போலியானதா அல்லது உண்மையானதா என்பதைக் கண்டறிய அதனை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications