”நிர்ப்பயா” வழக்கின் சிறார் குற்றவாளி புகைப்படத்தை வெளியிட பெற்றோர் கோரிக்கை
டெல்லி: டெல்லியில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சிறுவனான குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் செய்தியாளர்களிடம், "சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள அந்த மைனர் நபர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள மற்றவர்களிடம் இருந்து ஜிஹாத் தொடர்பான போதனைகளைப் பெற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இத்தைகைய போக்கு மிகவும் ஆபத்தானது.
இச்சூழலில் அந்த மைனர் நபரை விடுவிப்பது சமூகத்துக்கு ஆபத்தாக அமையும். கூட்டுப் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்ட அந்த நபர், தனது குற்றச் செயல்களுக்கு வருந்தியதாகவும், திருந்தியதாகவும் தெரியவில்லை. எங்கள் மகளுக்கு நிகழ்ந்த கொடுமை வேறெந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது.
அந்த நபர் தனது தண்டனைக் காலம் முடிந்து அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இந்நிலையில், அந்த நபரை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தால் அவரது புகைப்படத்தை வெளியிட்டு சமூகத்துக்கும், உலகத்திற்கும் அந்த நபரை அடையாளம் காட்ட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.