ஒரே ரசிகர்கள் கூட்டம்... போலீஸ் பாதுகாப்புடன் நடந்த காலா படப்பிடிப்பு!
மும்பையில் நடைபெற்று வரும் காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த்தை காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடத்தப்பட்டது.
மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் ரஜினியின் காலா கரிகாலன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண ரசிகர்கள் திரண்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 164-ஆவது படம் காலா கரிகாலன் ஆகும். இதன் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி மும்பையில் தொடங்கப்பட்டது. தாராவியில் உள்ள பகுதியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
40 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் ரஜினிகாந்த் கருப்பு வேட்டியும், ஜிப்பாவும் அணிந்து கொண்டு தாதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ரஜினியை தொட்டு அவர் பக்கத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர்.
தடங்கல் ஏற்பட்டது
இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை சுற்றி பாதுகாப்பு வளையத்தை அமைத்து அவரை அழைத்துச் சென்றனர்.
ரசிகர்கள் ஆரவாரம்
எனினும் ரஜினியின் ஸ்டைலான நடிப்பை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ரஜினிகாந்த் தலையில் ‘குல்லா' அணிந்து நடந்து செல்வது போன்ற காட்சிகளும் படமானது. அப்போதும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து குரல் எழுப்பியபடி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் படப்பிடிப்பு
தாதாவாக இருக்கும் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதுவது போன்ற ஆக்ரோஷமான சண்டை காட்சிகளையும் மும்பையில் படமாக்குகின்றனர். மும்பை படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்டமாக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
நெல்லை தமிழ்
இதற்காக பூந்தமல்லி பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர். நெல்லையில் இருந்து மும்பையில் செட்டிலான ஒரு குடும்பத்தை பற்றிய கதை என்பதால் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது.