‘மனைவியே கண்கண்ட தெய்வம்’... கோவில் கட்டி வழிபடும் கர்நாடக விவசாயி!
கர்நாடகாவில் மனைவிக்காக விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா விவசாயி ஒருவர் தனது மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ நகர் கிருஷ்ணபுரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜுசாமி. இவரது மனைவி ராஜம்மாள். ராஜூ தனது சகோதரி மகளான ராஜம்மாளை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்.
திருமணமான சில நாட்களிலேயே தங்களது மூன்று ஏக்கர் நிலத்தில் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என ராஜம்மாள் விருப்பம் தெரிவித்துள்ளார். மிகுந்த கடவுள் பக்தி உடையவரான ராஜம்மாளின் ஆசையை நிறைவேற்றிட முடிவு செய்தார் ராஜு.
எனவே, கோவிலைக் கட்டுவதற்கான வேலைகளை அவர் தொடங்கினார். ஆனால், கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னதாக எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் காலமானார். இதனால், தனது மனைவி ராஜம்மாளின் சிலையையும் தான் கட்டிய கோவிலில் வைக்க ராஜூ முடிவு செய்தார்.
இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், எதிர்ப்புகளை மீறி சிவன், நவக்கிரகம், சனீஸ்வரன் உள்ளிட்ட சிலைகளுடன் தனது மனைவி சிலையையும் அவர் கோவிலில் வைத்தார்.
கடந்த 2006ம் ஆண்டு இந்தக் கோவில் கட்டுமானப்பணி முடிந்து பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 12 வருடங்களாக தனது மனைவியின் சிலைக்கு ராஜூ பூஜை செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் ராஜூவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊரார், தற்போது ராஜம்மாளின் சிலையையும் வணங்கத் தொடங்கி விட்டனர். இந்தக் கோவிலையும் ராஜம்மாள் கோவில் என்றே அவர்கள் அழைக்கின்றனர்.
கணவரே கண் கண்ட தெய்வம் என்று கூறுவார்கள். ஆனால், மனைவிக்காக ராஜூ கோவில் கட்டியிருப்பதை அந்த ஊர் மக்கள் பெருமையாக பேசுகின்றனர். தற்போது பக்கத்து கிராமங்களில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications