காவிரி: உச்சநீதிமன்ற உத்தரவால் பதட்டம்... பெங்களூர் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்!
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்துக்கு 15,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து ஒருவார காலமாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்துக்கு கூடுதலாக காவிரி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக வாகனங்கள் மீது கர்நாடகாவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் சில பள்ளிகள் திடீரென மூடப்பட்டன.
சில பள்ளிகளில் மாணவர்களை வந்து அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டன. இதனால் பெங்களூரு நகரில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தலைநகரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டதால் நகர் முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.