40+20 சட்டப்பேரவை தொகுதிகள்.. தேர்தலுக்கு தயாராகும் சத்தீஸ்கர், மிசோரம்! வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ராய்ப்பூர்: நவம்பர் மாதம் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 60 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்த அளவில், தற்போது மாநிலத்தில் ஆட்சியாளராக காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக். 20ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடத்தப்படுகிறது. வேட்புமனுக்கள் வரும் 21ம் தேதி பரிசீலிக்கப்படுகின்றன. அதனை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 23 கடைசி நாளாகும்.
இது தவிர தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10. வேட்புமனுக்கள் நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் வரும் 21ம் தேதியும் ராஜஸ்தானில் வரும் 30ம் தேதியும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications