ஜிஎஸ்டியை மக்கள் ஆதரிக்கின்றனர்... உ.பி உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு ஜேட்லி பெருமிதம்!
ஜிஎஸ்டிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதையே உத்திர பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி : வர்த்தகத்தை எளிமைபடுத்தும் ஜிஎஸ்டிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதையே உத்திர பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம பேசிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு உத்திர பிரதேசம் மற்றும் உத்ராகண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடைந்ததை சுட்டிக் காட்டினார். வர்த்தக நகரான உத்திரபிரதேச மக்கள் உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தவற்றிற்கு அளித்த ஆதரவாகவே சட்டசபை தேர்தல் வெற்றிகள் பார்க்கப்பட்டன.
அதையே தான் இன்றும் உத்திரப்பிரதேச மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். 3 கட்டமாக உத்திரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 16 மாநகராட்சி மேயர் பதவிகளில் 14 இடங்களை பாஜக வென்றுள்ளது. ஜிஎஸ்டி வியாபாரத்தையும், வணிகத்தையும் எளிமையாக்கியுள்ளது. ஒவ்வொரு வணிகரின் சந்தைப்படுத்தும் அளவும் அதிகரித்துள்ளது. இப்போது மொத்த நாட்டு மக்களுமே தங்களின் வியாபாரச் சந்தையில் வளர்ச்சி கண்டுள்ளன என்று ஜேட்லி மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவை தாக்கும் ஆயுதமாக ஜிஎஸ்டி தாக்கங்கள் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையே முன் எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் உத்திரபிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஜிஎஸ்டியை மக்கள் அங்கீகரித்துள்ளதை வெளிக்காட்டுவதாக அருண்ஜேட்லி தெரிவித்துள்து குறிப்பிடத்தக்கது.