தாஜ்மஹால் பளிங்கு கற்கள் மீதான பச்சை நிற படிமங்களை அகற்ற உ.பி. அரசு உத்தரவு
லக்னோ: தாஜ்மஹாலின் பளிங்கு கற்கள் மீது பச்சை நிறபடிமங்கள் ஏன் படிந்துள்ளது என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்ரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
தாஜ் மஹாலின் மீது படிந்து வரும் பச்சை நிறப் படிமங்களால் அதன் அழகு பொலிவிழந்து வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த பாதிப்புகளுக்கு சிரினோமிட்ஸ் என்ற பூச்சியினங்களின் கழிவுகள் காரணமாக இருக்கலாம். அந்தப் பூச்சியினங்கள், அருகில் உள்ள யமுனை நதியில் பல்கிப் பெருகி, அந்த நதியையும் மாசுபடுத்தியுள்ளன என கூறப்படுகிறது.

இதனிடையே, மத்திய சுற்றுச்சூல் துறை அமைச்சகம், உத்தரப் பிரதேச அரசு மற்றும் அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் தாஜ்மஹாலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க கோரியிருந்தது.
இதைத் தொடர்ந்து தாஜ்மஹால் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் கண்டறியுமாறு ஆக்ரா மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர், பொதுப் பணித் துறை அதிகாரிகள், தொல்லியல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications