ஹெலிகாப்டரில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சந்திரசேகரராவ்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறப்பட இருந்த ஹெலிகாப்டரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டரின் பின்புறத்தில் ஏற்பட்ட தீயை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தகவல் கொடுத்து அணைத்ததால் சந்திரசேகரராவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் விதமாக பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இன்று காலையில் கரிம் நகரில் கூட்டத்தை முடித்து கொண்டு அடுத்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டருக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை பார்த்த சந்திரசேகரராவின் பாதுகாப்பு அதிகாரி உடனடியாக எச்சரிக்கை செய்துள்ளார். ஹெலிகாப்டரில் சரக்குகள் வைக்கும் இடத்தில் இருந்த பையில் இருந்த எலக்ட்ரானிக் சாதனம் ஏதோ ஒன்று தீ பிடித்ததே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பையை அப்புறப்படுத்திய பின்னர் சந்திரசேகர ராவ் தனது பயணத்தை தொடர்ந்தார்.
பாதுகாப்பு அதிகாரி தீயை முன்கூட்டியே கண்டறியாமல் இருந்திருந்தால் ஹெலிகாப்டர் நடுவானில் தீபிடித்து எரிந்திருக்கும். ஹெலிகாப்டர் விபத்துகள் என்றாலே ஆந்திர மாநில மக்களுக்கு ஒரு அச்ச உணர்வு இருக்கத் தான் செய்கிறது. கடந்த 2009ல் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் சிக்கியே ஆந்திர முதல்வராக இருந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி உயிரிழந்ததே இதற்கு முக்கிய காரணம்.