ஏர்டெல்லுக்கு 12 வருடம், ஜியோவுக்கு வெறும் 85 நாள்.. 5 கோடி வாடிக்கையாளர்களால் முகேஷ் அம்பானி குஷி
ஜியோ அறிமுகம் செய்து 85 நாட்களே ஆன நிலையில் 5 கோடி சந்தாதாரர்களை எட்டி பெரும் சாதனை படைத்துள்ளது என்றும், அது வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்றும் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்
மும்பை: ஜியோ செல்போன்/இணைய சேவையை தொடங்கி 85 நாட்களே ஆன நிலையில் சுமார் 5 கோடி சந்தாதாரர்களை எட்டி அந்நிறுவனம் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதாக ரிலையன் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறியிருக்கிறார்.
ஏர்டெல் நிறுவனம் சுமார் 5 கோடி சந்தாதாரர்களை எட்ட 12 ஆண்டுகள் ஆனது. அதேபோல் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இந்த இலக்கை எட்ட தலா 13 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த செப்டம்பரில் தொடங்கி ஜியோ 85 நாட்களில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது .
ஜியோ தனது சேவையை செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கியது. வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை இணைய சேவை, குறுந்தகவல், வாய்ஸ் கால் உள்பட அனைத்து சேவைகளும் இலவசம் என அறிவித்தது.
இதனால் மற்ற நிறுவனங்களும் இணைய சேவைக் கட்டணத்தை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. நாடுமுழுவதும், 3 ஆயிரத்து 100 நகரங்களில் ஆதார் மூலம் ஜியோ சிம் வழங்கும் திட்டத்தையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சேவை ஆரம்பிக்கப்பட்டபோது, 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே தங்கள் இலக்கு என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.