பீகாரில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
பாட்னா: பீகாரில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இன்று மாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது மத்திய ரிசர்வ் படை. அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஏ.கே-47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள்,வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.