என்னை திட்டுவதற்காவது காஷ்மீரில் மக்கள் உயிரோடு இருக்கிறார்களே: உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: என்னை திட்டுவதற்காவது காஷ்மீரில் இன்னும் மக்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுகிறேன் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது. 109 ஆண்டுகளில் முதல்முறையாக இப்படி ஒரு வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். இந்திய ராணுவம் உயிரை பணயம் வைத்து பல மக்களை காப்பாற்றியுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாநில அரசின் திறமையின்மையை விமர்சனம் செய்து வருகிறார்கள். மத்திய அரசின் மற்றும் ராணுவத்தின் செயல்பாட்டை பாராட்டிவருகிறார்கள்.
இந்நிலையில் இன்று தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உமர் அப்துல்லா கூறுகையில் "மீட்பு முகாம்களில் இருந்தபடி எனது அரசை மக்கள் குறை கூறிவருகிறார்கள். முகாம்களில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உயிர் பிழைத்துவிட்டனர் என்றுதானே அர்த்தம். இதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.
ராணுவத்தின் படகாலா அல்லது காஷ்மீர் மாநில அரசின் படகாலா என்பது முக்கியமில்லை. மக்கள் படகுகளால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதுதான் எனக்கு முக்கியம். காஷ்மீரில் இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு முன் எப்போதும் ஏற்படாதது. எனவேதான் அரசு போதிய அளவுக்கு தயாராக இருக்கவில்லை" என்றார்.