கடும் பனி மூட்டம்... டெல்லியில் விமான போக்குவரத்து கடும் பாதிப்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலை நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
47 விமானங்கள் தாமதமாகின. 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலைய பகுதிகளில் 50 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே காட்சிகள் தெரிந்ததால் விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்தது.
இதேபோல டெல்லியின் புறநகர்ப் பகுதிகளான பரீதாபாத், நொய்டா மற்றும் காஸியாபாத் ஆகிய பகுதிகளிலும் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது.
காலை 5:30 மணி நிலவரப்படி வெப்ப நிலை 8 டிகிரியாக இருந்தது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குளிர் கால பருவத்தில் கடும் பனிமூட்டம் நிகழும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
மேலும் இது பிப்ரவரி முதல் வாரம் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட இரவு நேரங்களில் கடும் பனி கொட்டி வருகிறது. பல இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.