நானும் அசைவம் தான்.. உணவுப் பழக்கம் தனி நபர் விருப்பம் சார்ந்தது.. வெங்கய்யா நாயுடு!
டெல்லி: உணவுப் பழக்க வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது. என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் நானும் ஒரு அசைவ பிரியர் தான் என்றும் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. மத்திய அரசு நாடு முழுவதும் அனைவரையும் சைவமாக மாற்றப் பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து களைக்கட்டியது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் கூறியிருந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
மேலும், நானும் நான் வெஜ்தான் என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்தது என்றும் அவர் கூறினார். இதையெல்லாம் ஒரு பிரச்னையாக்கி செயல்படக் கூடாது. நான் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக் கூடாது என யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை உணவு பழக்க வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது என்றார்.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் வெங்கையா நாயுடு இவ்வாறு கூறியுள்ளார்.