ரூ. 10,000க்கு ‘நல்ல’ பேய், பிசாசு விற்பனைக்கு... சத்தீஸ்கரில் நடந்த நூதன சதுரங்க வேட்டை
ஜஸ்பூர்: படிப்பறிவில்லாதவர்களை எப்படி ஏமாற்றியிருக்கிறது பாருங்கள் இந்தக் கும்பல். சத்தீஸ்கரில் நன்மை செய்யும் பேய், பிசாசு என்று கூறி ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்து 3 பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் மிக, மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். கல்வியறிவு இல்லாத அம்மக்கள் மத்தியில் அதிகளவில் மூடநம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் உள்ளன.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று. மலைவாழ் கிராமத்தின் சாலையொன்றில் கூடிய அக்கும்பல், பில்லி, சூனியம், மற்றும் கண் திருஷ்டி நீங்கி வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் வேதாளம், பேய், பிசாசு உள்ளிட்ட ஆவிகள் மூலம் நன்மைகளை வாரி வழங்குகிறோம் என நம்பும்படி பிரச்சாரம் செய்துள்ளனர்.
அதனை அப்படியே நம்பிய மக்களிடம், மூடி முத்திரையிடப்பட்ட டப்பாக்களைக் காட்டி, ‘இந்தப் பெட்டிக்குள் நன்மை தரக்கூடிய ஆவி உள்ளது. இதன் விலை ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தான். அதை வாங்கி சென்று வீட்டில் வைத்து விடுங்கள். உடனே அதை திறந்து பார்க்கக்கூடாது. இரவில் திறந்து பணம், நகை, பொருள் போன்ற ஐஸ்வர்யங்களை கேட்டால் உடனே அவற்றை அந்த ஆவி வழங்கும்' என அக்கும்பல் அடுக்கடுக்காக கதை விட்டுள்ளனர்.
ஆனால், அதை உண்மை என நம்பிய மக்கள் பணம் கொடுத்து அந்த டப்பாக்களை வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் இரவில் திறந்து பார்த்து தாங்கள் விரும்பியதை அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், ஒரு அதிசயமும் நடக்கவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தாங்கள் ஏமாந்தது குறித்து பாகிசா நகர போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எஸ். துபே, மோசடி பேர் வழிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், மற்ற இருவரும் அருகில் உள்ள சர்குஜா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications