பா.ஜ.க முன்னாள் மூத்த தலைவர் பங்காரு லட்சுமணன் காலமானார்
பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான பங்காரு லட்சுமணன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அரசியலில் சேர்ந்தார்.
கடந்த 1975- ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அவசர காலத்தில் சிறை சென்றவர் பங்காரு லட்சுமணன். இவர் 1996ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதீய ஜனதாக் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்த இவர், முதன்முதலாக அக்கட்சியின் சார்பில் ராஜஸ்தான் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2000 மற்றும் 2001ல் பா.ஜ.க தலைவராகவும் 1999 முதல் 2000 ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராகவும் பங்காரு லட்சுமணன் பதவி வகித்து வந்தார்.
சமீபகாலமாக உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்த பங்காரு லட்சுமணன், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். செகந்திராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், பின்னர் இன்று காலை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராம் பள்ளியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை ஐதராபாத் பஞ்சாகுப்தா மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. சிதைக்கு அவரது மகன் சாய் பிரசாத் தீமூட்டுகிறார். இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மரணம் அடைந்த பங்காரு லட்சுமணன் மனைவி பெயர் சுசிலா லட்சுமணன். இவர் 14-வது பாராளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்தவர். பல்லவி, கவிதா, சுஜி ஆகிய 3 மகள்களும், சாய்பிரசாத் என்ற ஒரே மகனும் உள்ளனர்.
அரசியலில் வேகமாக வளர்ச்சி அடைந்த பங்காரு லட்சுமணன் தெகல்கா இணைய தளத்தில் போலி ராணுவ பேரத்தில் லஞ்சம் வாங்கி பதவியை இழந்ததுடன் அந்த விவகாரத்தில் கோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அவரது அரசியல் செல்வாக்கை வீழ்ச்சி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.
பங்காரு லட்சுமணனின் மறைவிற்கு பாஜக தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.