புதிய 200 ரூபாய் நோட்டுகள்.. மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் சொல்வதை கேளுங்கள்
புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்று மகாராஷ்ட்ர மாநில முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்ட்ரா சட்டப் பேரவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் பிருதிவிராஜ் சவான், புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்தமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்து ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், வணிகர்கள், ஊரகப்புற மக்கள் என அனைத்து தரப்பினரையும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
அப்போது, இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பிருதிவிராஜ் சவான், புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டே வெளியிடப்பட்டதாகவும் அவர் குறை கூறினார்.
வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை முறைகளை கொண்டு வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் சவான் தெரிவித்தார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசையும் நிதி அமைச்சகத்தையும் முதலமைச்சர் பட்னாவிஸ் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊரக பொருளாதாராம் கடும் இடர்களை எதிர் கொண்டுள்ளதாகவும் சவுகான் தெரிவித்தார். ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதில் எதாவது புத்திச் சாலித்தனம் உள்ளதா என்றும் அவர் வினவினார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கருப்புப் பணம் நடமாட்டம் இருந்ததா இல்லையா என்பதை முதலமைச்சர் பட்னாவிசும், பாஜகவும் விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடன் அட்டை, பற்று அட்டை பயன் படுத்த வேண்டும் என்று பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தேர்தலின்போது அக்கட்சி அவற்றை உபயோகிக்குமா என்றும் காட்டமாக கேட்டார்.
உலகின் எந்த நாட்டிலும் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வங்கிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்காக கூட்டுறவு வங்கி பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் சவான் தெரிவித்தார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட இருந்ததை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எதிர்த்தார் என்றும் பிரிதிவிராஜ் சவான் குறிப்பிட்டார்.