கங்குலி பாஜகவில் சேருவாரா, மாட்டாரா? - மீண்டும் கிளம்பிய பூதம்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் கங்குலி சேர உள்ளார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவி வருகின்றது. அவருடைய சொந்த ஊரான மேற்கு வங்காளத்தில் அவரை நிறுத்தி எப்படியாவது திரிணாமுல் காங்கிரஸின் பலத்தினை உடைக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முதல்வரான மம்தா பானர்ஜி ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலையில், கங்குலியை அங்கு களமிறக்க முயன்று வருகின்றது பாஜக. ஆனால் பாஜகவின் வலையில் நேரடியாக இதுவரை சிக்காமல் நழுவி வருகிறார் கங்குலி. காரணம், அவர் மமதாவுக்கும் நண்பராக இருப்பதால்.
42 வயதான, வங்காள சிங்கம் என்றழைக்கப்படும் கங்குலி, இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தியா அணியின் கேப்டனாக பதவி வகித்த கங்குலி, 113 டெஸ்ட் போட்டிகளிலும், 311 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சச்சினை ராஜ்யசபாவின் நியமன எம்.பியாக்கியது. இதைத் தொடர்ந்து, அதற்கு போட்டியாக கங்குலியை இறக்க போராடி வருகின்றது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.